Saturday, March 16, 2013

எப்போதோ கொட்டிய மழைத்துளிகள்!!!


நானொரு கேள்வி எழுப்புகிறேன் - அதை

நாயகம் பெயரால் அனுப்புகிறேன் !

நீயொரு பதிலைச் சொல்லிவிடு - அந்த

நினைவில் என்னை மிதக்கவிடு!


அழுது கேட்டும் கிடைக்கவில்லை - உன்

ஆணை இன்னும் பிறக்கவில்லை!

விழுந்து சாக மனமுமில்லை - அது

வீணர் வழக்கம் எனக்குமில்லை!


மனிதப் பொறுமை கடந்துவிடும் - என்

மனதின் குமுறல் உடைந்துவிடும்!

இனியும் கருணை மறுப்பதென்றால் - என்

இறைவா என்னுயிர் துடித்துவிடும்!


கேட்டால் தருவது தருமமல்ல - நான்

கெஞ்சிக் கேட்பது புதுமையல்ல!

ஆட்டம் முடியும் எல்லைவரை - நீ

அருள மறுப்பது நியாயமல்ல !


பிடரி நரம்பின் பக்கத்தில் - உன்

பீடம் இருப்பதை நானறிவேன்!

இடரோ துயரோ எதுவரினும் - அது

எனக்குள் இருப்பினும் கவலையில்லை!


இறைவா உன்னைப் பணிகின்றேன் - இனி

எதுவும் வரட்டும் துணிகின்றேன்!

நிறைவோ , குறைவோ வெறுப்பில்லை - நீ

நினைத்ததே நடக்கும் மறுப்பில்லை!

புத்தகம் ஆயிரம் படித்துவிட்டேன் - என்

புத்தியால் அதனைப் பிடித்துவிட்டேன்!

செத்ததும் எதுவும் தொடர்வதில்லை - என்

சிந்தனை அங்கே படர்வதில்லை!

சொட்டுத் துளியில் படைத்துவிட்டாய் - உன்

சுவனம் வரைக்கும் அழைத்துவிட்டாய்!

கெட்டுத் தொலைவது விதியுமில்லை - உன்

கிருபைக் காக்கும் தடையுமில்லை!



முஹம்ம தென்னும் ஒளிப்பிழம்பு - அதன்

முன்னே கிடக்கும் சிறுதுரும்பு!

எமக்குக் குறைவு வருவதில்லை - இந்த

ஈமான் கணக்கு முடிவதில்லை!

2 comments:

  1. அருமையான கவிதை.
    நன்றி ஐயா.
    Please avoid Word Verification; you may add comments moderation option.

    ReplyDelete
  2. பாரட்டுக்கு நன்றி.நட்பில் தொடருவோம்.

    ReplyDelete